Quantcast
Channel: கவிஞர் இசை
Viewing all 790 articles
Browse latest View live

ரவா ரோஸ்ட்

$
0
0


    




ஒரே மகள் 
தீவிர சிகிச்சைப் பிரிவில் கிடக்கிறாள்
விபத்தில் சிக்கி தலையில் பலத்த காயம்
மாதம் இரண்டாகிறது
இப்போதுதான் நாளுக்கு ஒரு முறையென
விழித்துப் பார்க்கிறாள்
அப்போதும் 
எங்கேயோ பார்த்துவிட்டு கண் மூடிக்கொள்கிறாள்
இவள் சவம் போலாகிவிட்டாள்
இரண்டு நாட்கள் பட்டினி கிடந்தாள்
பிறகு
நான்கு இட்லிகளை வாங்கி
அதில்  இரண்டரையை சாப்பிட்டாள்.
ஒரு நாள்
நான்கு இட்லிகளுடன் வந்த சர்வரிடம்
” ரவா ரோஸ்ட் “ இருக்கா ? என்று கேட்டாள்
வாங்கி உண்டாள்...
முழுசாக   உண்டாள்...
கடைசியில் சுண்டுவிரலைக் கூட  சப்பினாள்
கைகழுவும் வேளையில் தான் உணர்ந்தாள்
தீடீரென இப்படி “ ரவா ரோஸ்ட் “ தின்று விட்டதை.
உணவகம்  ஒலிவீசக்  கத்தினாள்.







சிக்கெனப் பிடித்தல்

$
0
0
                           
             

 பிரச்சனை
” சிக்கெனப் பற்றுதலில் “ தான் இருக்கிறது.
நல்லவேளையாக வாதவூரனுக்கு
 உடைந்த மதியும், ஊரும் பாம்பும் 
கிடைத்து விட்டன.
அவன் அதைப்பற்றிக்கொண்டு  கதிமோட்சம் கண்டான்.
கச்சவிழ்ப்பின் வழியே வீட்டுலகம் அடைந்தவர்களை
அவன் அங்கு சந்தித்தான்.
சிக்கெனப்பற்றப்படும் எதுவும்
யாரையும் கைவிட்டு விடுவதில்லை.
எவ்வளவு முயன்றும்
எப்படிப் புரண்டும்
எதையும் பற்றிக்கொள்ள இயலாதவர்கள்
கடைசியாக
தாம்புக் கயிறு வாங்கிவர
வேகமாக கிளம்புகிறார்கள்.
ஆகத்துயரம் என்னவெனில்
அவர்களில் பலருக்கு
அதுவும் கீழே விழுந்து உடைந்து விடுகிறது.

பூட

$
0
0

                  





என் கண்களைத் திறந்து வைத்தால்
நன்றாக காற்று வரும்.
சுற்றிலும் வேம்பும் அரசும் நிற்கின்றன.
இடிக்கு தூர்ந்து விடாது
மழைக்கு ஒழுகி விடாது
இதமான வர்ணங்களால் 
எழிலுற வனையப்பெற்ற
விசாலமான அறைகள்...
இவ்வுடல் பூடைக்கு கொழுநிழல்.
என் கால்மேல் கால்போட்டு
மார் மேல் தலைசாய்த்து
அப்படியொரு தூக்கம் அதற்கு.
                                  
                        ( பூடை - “ பீடை” யின் கொச்சை.  பூட - பூடையின் கொச்சை )


நீர்மலிகண்ணார்

$
0
0


இன்னும்
எவ்வளவோ இருக்கிறது
எல்லாம் உனக்குத்தான்
வேறு யாருக்குமல்ல

இன்னும்
எவ்வளவோ இருக்கிறது
எல்லாம் உனக்குத்தான்
வேறு யாருக்குமல்ல

நீதிநெறி விளக்கம்

$
0
0
                                




நான் பார்க்க
எவ்வளவு காலமாய்
எந்தக் கதவையும் உடைக்காமல்
எந்தப் பூட்டையும் திறக்காமல்
இவ்வளவு சாவிகளைப் பரப்பிக்கொண்டு
புதன்கிழமைச் சந்தைகளில் வீற்றிருக்கிறார்
இந்தக் கந்தலாடைக் கிழவர்.



செல்வத்தைத் தேய்கும் படை

$
0
0
                      




இந்த நகரத்தின் ஓரத்தில்
சாக்கடையைப் போல் சுழித்து ஓடுகிறதே 
து  எங்கள் கண்ணீர்...

இந்த நகரத்தின் பாலங்களில்
ஓடி விரைகிறதே
வை
நேற்று  சந்தைக்கு வந்த
கொள்ளையர் சிவிகை...

இரண்டும் ஒன்றையொன்று சந்தித்துக் கொள்வதில்லை.

உண்கண்

$
0
0
           

காதலனொருவனுக்கு
“ கண்டார் உயிர் உண்ணும் கண் “
என்கிற வரியை வாசித்த மாத்திரத்தில்
மெய்நடுக்கம் கண்டு விட்டது.
அல்லும், எல்லும் அதையே
பிதற்றித் திரிந்தான்.
உண்கையில், உடுக்கையில்
குளிக்கையில், கழிக்கையில்
சொல்லி சொல்லிப்பார்த்தான்.
நடத்துனரிடம் பத்து ரூபாய் நீட்டி
 உயிருண்ணும் கண்களைக் கேட்டான்.
பணியிடத்தில்
ஏத்துயேத்தென்று ஏத்தும் போதும்
உள்ளுக்குள் அக்கண்களை கண்டு நின்றான்.
அடேய்..மடதம்பி..!
அதிகாலை 5 மணிக்கு
எல்லா கண்ணும் பீளையுண்ணும் கண்.

நம்பு !

$
0
0
                         




இந்தக் கோடையை
எத்தனை எலுமிச்சைகளின் துணையுடன் 
கடந்து வந்தேனோ
அத்தனை எலுமிச்சைகளின் மீதும்
ஆணையிட்டுச்  சொல்கிறேன்..
என்னை நம்பு !

வல்லான் வகுத்ததே வாய்க்கால் !

$
0
0

                                        
                                

தம்பி,
முதலில் உன் மேல்கோட்டை கழற்றி வானத்திற்கு வீசு..
தாவாக்கொட்டையில் குந்தியிருக்கும்
அந்த ஃப்ரெஞ்ச் மயிரை மழித்தெறி..
இனி கழுத்து நீண்ட குடுவைகளில்
எதையும் போட்டுக் கலக்காதே..
நமக்கு ஒன்றுமே புரிவதில்லை தம்பி..!
எதையும் யோசித்தல் கூடாது
அதிலும் ஆழ்ந்து யோசித்தல் கூடவே கூடாது
நமது பரிசோதனை கூடத்தின் மீது புல்டோசரை விடு..
ஒரு வேம்பின் கீழே
குறையுடையில் கிடப்போம் வாடா !

Article 1

பயனிலி

$
0
0

                 

செல்ஃபோனே கெடுதி என்பதுதான் அறிஞர்கள்  தரப்பு
அது சிட்டுக்குருவிகளை அழித்துவிட்டதாக சொல்கிறார்கள்
பேசப்பேச வெடித்து விடுமென்றும் சொல்கிறார்கள்
அதன் கதிர்வீச்சால் எண்ணற்ற தீமைகள் விளையக்கூடும்
என்கிறார்கள்.
நேரத்தைக் கொல்லுதல்,
உள்ளத்தைக் கெடுத்தல்,
அறிவை மயக்குதல்
இவையெல்லாம்  உபரி தீமைகள்.
அதை கீழ்பாக்கெட்டில் வைத்தால்
ஆண்மை குறைந்துவிடும் என்றார்கள்
மேல் பாக்கெட்டில் வைத்தால்
இருதயம் கெட்டுவிடும் என்றார்கள்
ஆனாலும் எங்கேனும் வைத்தாக வேண்டுமல்லவா?
நான் நன்றாக சீர்தூக்கிப் பார்த்து
மேல்பாக்கெட்டில் வைப்பதென்று முடிவு செய்தேன்.
பொதுவாகவே 
நான் இதயத்தை அதிகமாக உபயோகிப்பதில்லை.


அமுதென்றும் நஞ்சென்றும் ஒன்று !

$
0
0


      

கடைக்கண்ணால் நோக்கி
நகைக்கூட்டம் செய்யத் துவங்கிவிட்டோம்
நாசூக்கு கூடி வருகிறது இருவரிடமும்
அந்தப்  பாம்புக்குட்டியை நான் பார்த்துவிட்டேன்
அது தன் பிளவுண்ட செந்நாவை
வெளியே நீட்டி
“காதல்..” “ காதல்..என்கிறது
இதை இப்படியே விடுதல் ஆகாது
எனவே
நேராகச் சென்று
“ இந்த வீக் எண்ட்ல ஜாலியா மகாபலிபுரம் போலாமா...
என்று கேட்டு வைத்தேன்.
செருப்பு பிஞ்சுடும்..என்றாள்
 ஒரே ஒரு செருப்படியோடு போனது
 இப்போது
 அவரவர் அவரவர் செருப்பை அணிந்து கொண்டு
 அவரவர் சோலிகளைப் பார்க்கிறோம்.


                      (  தலைப்பின்பம் நாஞ்சில்நாடனுடையது )
                                 

வழக்கமான கோழிக்கறி

$
0
0

                                         




வழக்கமான குடிகாரன்
வழக்கமான மதுவிடுதிக்குள்
வழக்கம் போல் நுழைகிறான்
வழக்கமான சிப்பந்தி
வழக்கமான வணக்கத்துடன்
”வழக்கம் போல் தானே..? “
என்று கேட்டான்.
“வழக்கம் போல் தான் ...” என்று சொல்லிவிட்டு
வழக்கமான இடத்தில் போய் அமர்ந்து கொண்டான்
வழக்கமான கோழிக்கறி 
வழக்கமான தட்டில்
வழக்கமான சத்தத்துடன் முன்வைக்கப்பட்டது
வழக்கமான சுதியில்
வழக்கமான எண்களை அழைத்து
வழக்கமான கண்ணீரைக் கொட்டினான்
வழக்கமான சொற்களால் நீவி விடப்பட்டான்
வழக்கமான நேரம் வந்ததும்
வழக்கம் போல் எழுந்து கொண்டு
வழக்கமான சாய்வில் 
வழக்கநடை நடந்து  வெளியேறுகிறான்.
பக்கத்தில் தான் இருக்கிறது
புத்தம்புதுமைகளின் கூடாரம்
அங்கு வந்தவன்தான் இவன்.


இருளி

$
0
0

      





உள்கதவைத் தாழிட்டாலே
உலகம் மறைந்து விடும்
அவளுக்கு 
வெளிக்கதவையும் அடைக்கவேண்டும்
வாசற்கதவையும் சாத்த வேண்டும்
ஜன்னல் வழியே உள்நுழையும் கள்ள ஒளிக்கீற்றை 
ஒரு முறை முறைப்பாள்
அது வந்த வழியே ஓடி விடும்
 புழுக்கத்தின் இன்பத்துள் வாழ்கிறாள் அவள்
கழுத்து வடவடப்பை
நாவை வீசி அவள் நக்கித் துடைத்ததை
ஒரு முறை ஒளிந்திருந்து பார்த்தேன்.



தொப்பிக்குள் கோழிக்குஞ்சு வந்து சேரும் வழி

$
0
0
                      

  ஓநாயும் ஆட்டுக்குட்டியும்- திரையாக்கமும் , திரைக்கதையும்


                                                          இசை








      சமீபத்தில் இயக்குனர் மிஷ்கினின் ஐந்து திரைக்கதைகள் நூல் வடிவம் பெற்றுள்ளன. அதில் ஓநாயும்,ஆட்டுக்குட்டியும்புத்தகத்துக்கு மட்டும் ஒரு சிறப்பம்சம் உண்டு.அது திரையாக்கம்என்கிற ஒன்றயும் கூடுதலாக தாங்கி வந்திருக்கிறது. இந்த திரையாக்கம் பகுதியில் மிஷ்கினே இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியையும் விளக்குகிறார். ஏன் இந்தக் காட்சியை வைத்தேன்? அதை ஏன் இந்தக் கோணத்தில் வைத்தேன் ? என்பது உட்பட ஒவ்வொரு காட்சி குறித்தும் விரிவான உரையாடல்களை முன் வைக்கிறார்.  இப்படி இயக்குனரே தன் திரைக்கதையை விளக்கிச்சொல்லும் புத்தகம் தமிழில் இதுவரை வந்ததில்லையென்றும்இதுவே முதல் முறையென்றும் புத்தகத்தின் முன் அட்டைக் குறிப்பு சொல்கிறது .

எல்லோரையும் போல எனக்கும் மிஷ்கின் அறிமுகமானது அந்தக் குத்துப்பாட்டின்வழியேதான். அது குத்துப்பாடல்தான் ஆனால் கூடவே அதில் வேறொன்றும் இருந்தது .வால மீனு பாடலை முதன்முதலாக பார்த்தபோதே அதில் ஒரு வித மயக்கம் இருப்பதை அறிந்துகொள்ள முடிந்தது. அந்த மயக்கம் மிஷ்கினின் எல்லாப் படங்களிலும் தொடர்ந்தது. மிஷ்கின் என்னவோ வித்தை காட்டுகிறார். மயக்கு வித்தையது. இந்தப்புத்தகத்தில் அந்த மயக்கம் எங்கிருந்து வருகிறதென்று வித்தைக்காரரே பேசுகிறார்.

      ஒரு மேஜிசியன் தன் தொப்பிக்குள் கோழிக்குஞ்சு எப்படி வந்து சேர்கிறது என்பதைச் சொல்வானா? அவனுக்கு கிறுக்கா பிடித்திருக்கிறது. அதுவன்றோ அவன் வாழ்வு..அவன் வசீகரம்..அவன் மர்மம்..? எனவே ஒரு மடையனும் அது குறித்து வாய் திறக்க மாட்டான். ஆனால் மிஷ்கின் சொல்கிறார். தொப்பிக்குள்ளிந்து கோழி எடுக்கும் வித்தை போனால் என்ன? கோழிக்குஞ்சிலிருந்தது தொப்பியை உருவும் வித்தையும் தனக்கு தெரியும் என்று அவர் உறுதியாக நம்புகிறார். அந்தத் துணிச்சல்... அந்தத் துணிச்சலில்தான் அவர் தன் எல்லா ஒப்பனைகளையும் களையத் துணிகிறார். எல்லா இரகசியங்களையும் வெளியரங்கமாக்குகிறார்.

         ஒரு படத்தில் ஜீப் ஒன்று உறுமி கிளம்பப் பார்க்கிறது. உறுமுகிறது.... ஆனால் கிளம்ப முடியவில்ல்லை. உறுமுகிறது... ஆனால் கிளம்ப முடியவில்லை. கடைசியில் பார்த்தால் அந்த ஜீப்பை ஒரு நாயகன் தன் ஒற்றைக்காலில் கட்டி நிறுத்தியிருக்கிறான். இதற்கு நிகரான காட்சி ஒன்று இப்படத்திலும் உண்டு.  SPLENECTOMY OPERATION “  செய்யப்பட்ட ஓநாய் எட்டு மணி நேரத்திற்குள் எழுந்து உட்கார்ந்து விடுகிறது. உட்காருவது மட்டுமல்ல. தாவுகிறது.. குதிக்கிறது.. சண்டையிடுகிறது.. “SPLENECTOMY OPERATION” செய்யப்பட்ட ஒருவர் எட்டு நாட்கள் முழு ஓய்வு எடுக்க வேண்டும் என்று மருத்துவம் சொல்கிறது.  நாம் முன்னதை மசாலா படம் என்கிறோம். இந்தப்படத்தை நல்ல சினிமா என்கிறோம்.. ஏன் ?  ஒரு வேளை இந்தக்கேள்விக்கான விடை இந்தப் புத்தகத்தில் உங்களுக்கு கிடைக்கக்கூடும்.

        தமிழில் உரைமரபு உண்டு. புரியக் கடினமானவற்றிற்கு உரை சொல்வது நமக்கு புதிதான ஒன்றல்ல. வள்ளுவரைத் தொட்டுணர சில சமயங்களில் பரிமேலழகர் அவசியமாகிறார் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் இங்கு சிக்கல் என்னவென்றால் படைப்பாளியே தன் படைப்புக்கு உரை சொல்வதுதான். இதில் தன்னைத் தானே பெருக்கிக் காட்டிக் கொள்ளும் தற்பெருக்கம்நிகழ்ந்து விட வாய்ப்புண்டு. ஆனால் மிஷ்கின் தன் மனம் திறந்த, பாசங்கற்ற உரையாடல்களின் வழியே இந்தச்சிக்கலை எளிதாக கடந்து விடுகிறார். தன் ஒவ்வொரு காட்சியையும் தானே வியந்து கொள்ள எழுதப்பட்டதல்ல இந்தப் புத்தகம் என்பதை நூலை வாசித்து முடிக்கையில் நாமும் ஒப்புக்கொள்கிறோம்.
  
       படத்தின் இறுதிக்காட்சி.. கண் தெரியாத சிறுமியை தன் பின்னால் நிறுத்திக் கொண்டு சண்டையிடும் காட்சி..   மிஷ்கின் சொல்கிறார்...

 “ என் கோட்டைக் கழற்றி, கையில் மாட்டிக்கொண்டு அந்தக் குழந்தையை அப்படியே இழுத்து வருகிறேன். நடந்து வருகிற பொழுது, என் கால்களுக்கு அடியில், அந்தக் குழந்தையின் சிறுகால்களும் வரும். சில சமயங்களில் நான் சினிமா எடுத்துக் கொண்டிருக்கும் பொழுது எதிர்பாரா விதமாக சில சிறந்த moments கிடைக்கும்..இந்த   moments- ஐ நான் மிகச்சிறந்த cinematic achievement ஆக பார்க்கிறேன்.அதாவது என்னுடைய முயற்சி எதுவும் இல்லாமல், என்னுடைய சுயம் அங்கில்லாமல், தானாக ஒரு சினிமா அங்கே நடந்திருக்கிறது. அதைக் கண்டுபிடித்து பயன்படுத்திக்கொள்வது மட்டுமே இங்கு இயக்குனராக என் வேலை. மேலும் இது போன்ற moments -கள்  ஒரு இயக்குனரை தலையில் குட்டு வைத்து கீழே உட்கார வைக்கின்றன.


    திரைக்கதை எழுதி, இயக்கி நடித்திருப்பதால் அதனதன் தனித்துவமான சவால்கள் குறித்து விரிவாகப் பேசுகிறார். ஒரு திரைக்கதை ஆசிரியராக எளிதாக எழுதி விட முடிந்ததை, ஒரு இயக்குனராக அவ்வளவு எளிதாக இயக்கி விட முடிந்திருக்கவில்லை. ஒரு இயக்குனராக எளிதாக சொல்லி விட முடிந்ததை, ஒரு நடிகராக எளிதில் நடித்து விட முடியவில்லை.

   இப்படத்தில் பெரிதாக மெச்சப்பட்ட காட்சி எதுவெனில், அதுவரையிலான படத்தின் மொத்தக் கதையையும் ப்ளாஷ்பேக் ஏதுமின்றி ஒரு சிறுமிக்கு கதை சொல்லும் வடிவில் சொல்லும் காட்சிதான். அந்தக் காட்சி மக்களுக்கு புரியாது, வேண்டவே வேண்டாம் என்று கடும் எதிர்ப்பு இருந்திருக்கிறது. உண்மையில் இந்தக்காட்சி பற்றி எழுதத்தான் இந்தப்புத்தமே எழுதப்பட்டதாக சொல்கிறார் மிஷ்கின்.  அந்தக்காட்சி குறித்து மிக விரிவாகவே சொல்லியிருக்கிறார் கொஞ்சமாக இங்கு பார்க்கலாம்...

“ என் எழுத்தாள நண்பர்களையும், உதவி இயக்குனர்கள் பத்து பேரையும் இந்தக் காட்சிக்குசம்மதிக்க வைக்கவே முடியவில்லை....

“ எழுத்தாளனுக்கு, கலைஞனுக்கு ஒரு காட்சி எழுதும் பொழுதே அதன் முடிவு தீர்க்கமாக வெளிப்படுகிறது.சிலர் அந்தத் தரிசனத்தைக் கண்டுகொள்ளும் பக்குவம் இல்லாதவர்களாக இருப்பார்கள்.அதனால் அந்தக் காட்சியில் பிழை இருப்பதாக அர்த்தமா ? நான் இன்னமும் உறுதியாக சொல்கிறேன். அந்தக் காட்சி மக்களுக்கு புரியாமல், பிடிக்காமல் போயிருந்தாலும் அதுதான் சரியான காட்சி. அந்தக் கதைக்கு அதுதான் கச்சிதமான கதைசொல்லல் என்பது சத்தியம் “

 “ எனக்கு முன்னால் பத்து பக்கங்கள் வசனமாக வைக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பத்துப்பக்கங்களையும் ஒரு எழுத்தாளராக மிகவும் கவனத்தோடு படிப்படியாக எழுதியிருக்கிறேன்.....

“ இரண்டு முறை மனப்பாடம் செய்ய முயற்சித்தேன். நான்கு வரிகள் சரியாக சொல்லி முடித்தவுடன் அப்பாடா.. இந்த வரிகளை சரியாகச் சொல்லியாயிற்றுஎன்ற சிந்தனை வருகிறது. அடுத்த வரிகளையும் சரியாகச் சொல்ல வேண்டுமே என்ற பயமும் அடுத்து வருகிறது. இப்படியே ஏதாவதொரு சிந்தனை என் மூளையில் ஓடிக்கொண்டேயிருக்கிறது. அது என் முகத்திலும் பிரதிபலிக்கிறது.

அந்தப் பத்துபக்க வசனங்களையும் தூக்கியெறிந்தேன். என்னுடைய உதவியாளர்களிடமும் , குழுமியிருக்கிற படப்பிடிப்புக் குழுவினரிடமும் நான் சொன்னது..  “ கேமராவை ஆன் செய்து வைத்துக்கொள்ளுங்கள். எல்லாமே தயாராக இருக்கட்டும். நானும் முன்னால் எனக்கான இடத்தில் அமர்ந்து கொள்கிறேன். கேமரா ஓடட்டும், ஒரே டேக்தான் நடிப்பேன், எவ்வளவு தூரம் அந்தக் காட்சி நன்றாக வருகிறதோ, இல்லையோ, எதுவானாலும் சரி. கதையை ஆரம்பித்துவிட்டு நான்கு வரிகளுக்கு மேல் என்னால் சொல்ல முடியாவிட்டாலும் நான் அப்படியே உட்கார்ந்திருப்பேன். கேமராவை நிறுத்த வேண்டாம். அப்படியே சிறிதுநேரம் இருந்துவிட்டு அக்காட்சியிலிருந்து வெளியே வந்துவிடுகிறேன்.. “


“ கவிதைகளைப் குறித்துச் சொல்கிற போது எழுத்தாளனும்  படிப்பவனும் கைகோர்த்துக் கொண்டு அதனை முழுமைப்படுத்த வேண்டும் என்று சொல்வதுண்டு.” Poetry is half completed, and another half is completed dy the reader.அந்தக் கவிதைக்கு ஈடாகத்தான் என் திரைப்படங்களை வைக்கிறேன் .

 “ ஓநாயும் ஆட்டுக்குட்டியும் வெளியான முதல் நாள் திரையரங்க வாசலில் நின்ற பொழுது படம் பார்த்து முடித்து வருகிற பார்வையாளர்கள் என்னைப் பார்த்ததும் ஓடி வந்து கட்டிப்பிடித்துக் கொண்டார்கள். அந்தக்காட்சியை என் ஆடியன்ஸ் ஏற்றுக்கொண்டதை அந்த அரவணைப்பில் உணர்ந்தேன். அங்கிருந்தே என் உதவி இயக்குனர்களைத் திரும்பிப் பார்த்து சொன்னேன். “please never never under estimate audience, they are geniuses, they are collective geniuses”


        
    






       ஒரு திரைப்படத்திற்கு தலைப்பிடுவது குறித்து சொல்லும் போது...


  ஒரு படத்தின் இருதயமாக டைட்டிலைப் பார்க்கிறேன்.ஒரு படத்தின் நாகரீகத்தை அந்த டைட்டிலை வைத்து அறிந்து கொள்ள முடியும். ஒரு டைட்டில் அந்தப் படத்தின் இயக்குனரை அடையாளங் காட்டுகிறது. அப்படத்தின் திரைக்கதையைப் பற்றிச் சொல்கிறது. அந்தப் படத்தின் சன்னலாக டைட்டிலே இருக்கிறது....

  ஓநாயும் ஆட்டுக்குட்டியும்என்கிற தலைப்பில் இருக்கிற குறியீட்டுத்தன்மை படத்தின்  பல காட்சிகளை உருவாக்கிக்கொள்ள உதவியிருப்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. ஓநாய் தன் குடும்பத்துடன் கல்லறையில் ஒளிந்திருக்கும் காட்சியில் போலீஸ் சுடுகிறது. அப்போது “DOWN… DOWN …DOWN “ என்று கத்தும் மிஷ்கினின் குரல் நிஜமாலுமே ஒரு மிருகத்தின் உறுமலாகவே ஒலிக்கிறது. கிளைமேக்ஸ் பெரிய வலைபோன்றதொரு பகுதியில் நடக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன்என்கிறார் மிஷ்கின்.  ஆம்.. ஓநாய், ஆட்டுக்குட்டி, கரடி, கழுதைப்புலிகள், புலிகள்...என எல்லாமும் அந்த  UNDER GROUND CAR PARKING “ - ல் ஒன்றிடம் ஒன்று சிக்கிக்கொள்கின்றன.

     ஓடும் ரயிலில் இருந்து டூப் போடாமல் குதித்த காட்சி பற்றி பேசும் இடத்தில் தன்னம்பிக்கை வசனங்களை பீய்ச்சியடிக்க ஒரு அரிய வாய்ப்பிருந்தது. ஆனால் மிஷ்கின் அதை பயன்படுத்திக் கொள்ளவில்லை. துணிந்தவனுக்கு தூக்கு மேடை பஞ்சு மெத்தை..என்றவர் கர்ஜிக்கவில்லை.

     “இரயிலிலிருந்து  குதிக்கிற போது எனக்கு தற்கொலை மனப்பான்மை தான் இருந்தது. இந்தக்காட்சியில் மட்டுமல்ல இந்தப்படம் முழுக்கவே எனக்கு தற்கொலை மனப்பான்மை இருந்தது......இந்தக்காட்சியை செய்து முடித்த பின்னர், நன்றாக செய்திருப்பதாக பாராட்டினார்கள்.அதெல்லாம் ஒன்றுமேயில்லை. இந்த மனம், நன்றாக செய்ய வேண்டும் என்ற வேகம், இரயிலிலிருந்து குதிக்க வேண்டும் என்ற தைரியம், எல்லாமே தற்கொலை உணர்ச்சியிலிருந்துதான் எனக்கு கிடைத்தது....

     மனம் ஒரு எல்லையைத் தாண்டிவிட்டால் எது சாதாரணம்? எது சாகசம்?

        இப்படத்தில் என்னை  வெகுவாக கவர்ந்த காட்சி எதுவெனில், அந்த “ head constable “ வில்லனின் துப்பாக்கிக்கு சல்யூட் அடித்த படி நெடுநேரம் நின்று, பிறகு செத்து விழும் காட்சி. இந்தப்படத்தை காய்ந்தாலும் உவத்தாலும்   அந்தக் காட்சி குறித்து  சொல்லாமல் இருக்க இயலாது. விரைவில் பணி ஓய்வு பெறப் போகும் வயதில் இருக்கிறார் அந்த கான்ஸ்டபிள். அவர் வாயில் “ ஐயா “ என்கிற சொல்லைத் தவிர வேறு சொல்லே இல்லை போலும். பணியில் சேர்ந்த நாள்  முதல் “ஐயா”... “ஐயா”... என்றே சதாகாலமும் தன் உயரதிகாரிகளை பணிந்து வந்தவர் அவர். ஒரு துப்பாக்கி ரவை எல்லா உயரத்திற்கும் உயரமானது. எனவே அதையும் “ஐயா “ என்று  வணங்கி நிற்கிறார்.
    

      திரைக்கதை எப்படி எழுதப்பட்டதோ அதே வடிவத்தில் தரப்பட்டிருக்கிறது. படமாக்கும் போது நிகழ்ந்த மாற்றங்கள், எடிட்டிங்கில் போனவை என எதுவும் கத்தரிக்கப்படவில்லை. மிஷ்கின் குறிப்புணர்த்தல்களால் கவனம் பெற்ற ஒரு கலைஞன். க்ளைமாக்ஸில் ஓநாய் ஆட்டுக்குட்டியின் கையில் முத்தமிடுவது போல எழுதியிருக்கிறார். இது குறிப்புணர்த்தலின் அழகியலுக்கு எதிராக இயங்கும் காட்சியாக இருக்கிறது. இக்காட்சி படத்தில் இடம்பெறவில்லை.ஆனால் திரைக்கதைப் புத்தகத்தில் இருக்கிறது. இவ்வரியை தன் புகழுக்கு இழுக்கு என்று அவர் கருதியதாகத் தெரியவில்லை. நீயாக இருந்தால் என்ன செய்திருப்பாய் தம்பி? என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். சந்தேகமென்ன... தம்பி கவனமாக கத்தரித்து எரிந்திருப்பான். தன்னை யானை என்று அவர் கருதிக் கொள்ளவில்லை எனவே அடி சறுக்கியதை மறைக்கவுமில்லை.

            இப்புத்தகத்தின் குறையென்று சொன்னால் ஒன்றைச் சொல்லலாம். அது இந்தப் புத்தகதிற்கேயான தனித்த குறை கூட அல்ல. பொதுவாகவே உரைசொல்லலின்குறைதான் அது. ஒரு ரசிகராக நாம் நமது சிந்தைனையிலிருந்து, நமது ரசனையிலிருந்து தான் காட்சிகளை உருவாக்கிக் கொள்கிறோம். இந்தப் புத்தகம் இயல்பாகவே அந்த உருவாக்கங்களின் மீது குறுக்கீடு செய்கிறது. ஆனால் நான் பேசியது தான் பேச்சு... புதிதாக நீங்கள் வேறு எதுவும் பேசி விடக்கூடாது என்று கட்டளையிடுவதில்லை. இடவும் முடியாது. மிஷ்கினின் விளக்கத்தை விடுத்து நாம் நமது சினிமாவை இதில் உருவாக்கிக் கொள்ள விரும்பினால் அதற்கு தடையேதுமில்லை.  

       மிஷ்கின் க்ளைமாக்ஸில் நிராதரவாக நிற்கும் அந்தச் சிறுமியின் காலில் விழும் காட்சி.....

  “ அந்தக் குழந்தையின் காலில் விழுகிற பொழுது, கேமராவானது குழந்தைக்கு பின்னால் வைக்கப்பட்டிருக்கும். குழந்தைக்கு பின்னால் யார் ? அது ஆடியன்ஸ். சொல்லப்போனால் நான் ஆடியன்ஸ் காலிலும் விழுகிறேன். அதற்கு காரணமாக என் நண்பர் ஒருவர் அழகான விளக்கம் அளித்தார்..

  “ ஓநாயும் ஆட்டுக்குட்டியும் “ என்ற நல்ல படத்தை எடுக்கத் தெரிந்த மிஷ்கின், தப்பான படமாக இதற்கு முன் “ முகமூடிஎடுத்ததற்காக மக்கள் காலில் விழுகிறார்என்று சொன்னார். இந்தப் பார்வையையும் ஒத்துக்கொள்கிறேன்..”

    எல்லாவற்றைறையும் தாண்டி நல்ல சினிமாவைக் காதலிப்பவர்களுக்கும். கற்றுக்கொள்ள விரும்புபவர்களுக்கும் இந்தப்புத்தகம் ஒரு “நல்வரவுஎன்றே சொல்ல வேண்டும்.

    சிவாஜி நடித்த திருவருட்செல்வர்படத்தின் இறுதிக்காட்சி.... திருநாவுக்கரசர் முதுமையின் வாயில் விழுந்து விடுவார். நடக்க முடியாமல் தவழ்ந்து செல்லும் அளவுக்கு தளர்ந்து விடுவார். இந்தக் கோலத்தில் திருக்காளத்தி  கோவிலுக்கு வேறு கிளம்பி விடுவார். தரிசனம் முடித்து எதிர்ப்படும் அடியார் ஒருவர் கேட்பார்..
.
 “ ஐயா.. நடக்க முடியாமல் ஊர்ந்து செல்லும் அளவிற்கு உடலில் வலுவிழந்துவிட்ட தாங்கள் இவ்வளவு சிரமத்தோடு எங்கு செல்கிறீர்கள்?

திருக்காளத்திக்கு.. அவ்வூர் கோவிலில் குடிகொண்டிருக்கும் காளத்தியப்பரைத் தரிசிக்க செல்கிறேன்..

   “திருக்காளத்திக்கா..? தாங்களா? இன்னும் இருபது காத தூரமிருக்கிறதே..? இப்போதே பலவீனமாகக் காணப்படும் தாங்கள் எப்போது அங்கு போய் சேரப்போகிறீர்கள்? அது வரை தங்கள் உடலில் உயிர் இருக்குமா? பேசாமல் வந்த வழியே திரும்பிச் சென்று விடுங்கள்...

  இதற்கு அப்பர் உறுதியாக மறுத்து விடுவார்..

   “ என்னையாளும் காளத்தியப்பரை கண்ணாரக் காணாமல் மாளும் இவ்வுடல் கொண்டு எந்த இடத்திற்கும் மீளேன்...என்று சொல்லி விடுவார்.
  
     வேறு வழியின்றி அடியார் இப்படி விடை தருவார்..

சரி.. உங்கள் மனவலிமை உங்களைக் காப்பாற்றட்டும்..பத்திரமாகப் போய் வாருங்கள்..

நானும் மிஷ்கினிடம் இதைப் போன்றே சொல்ல விரும்புகிறேன்..

சரி... உங்கள் நேர்மை உங்களைக் காப்பாற்றட்டும்.. பத்திரமாக போய் வாருங்கள்..


            பேசாமொழி வெளியீடு  - விலை.ரூ: 600

                                  நன்றி : அம்ருதா ஜூலை - 2016   



சுபம்

$
0
0



          
அவன் இங்கு வந்ததே
அந்த வெள்ளிக்கிழமைக்காகத் தான்.
அதன் முலையழுந்த அணைக்கத்தான்.
புதன் வரை  பொறுத்துவிட்டான்.
அதற்கு மேல் ஆகவில்லை.
இந்த வியாழன் ஓர் இடைஞ்சல்
ஒரு வாய்க்காலை தாண்டிக் குதிப்பதைப் போலே
அதை கடந்து விடத் துடித்தான்
தன்னை ஒருவன் தாண்டிப் போவதை பொறாது
 வியாழன் வாய் பிளந்து கத்தியது  .
வண்டி நிறைய ஆட்களை அனுப்பியது
காதலின் கனலி
சில மண்டைகளை உடைத்துப் போட்டான்
சில கால்களை முறித்துப் போட்டான்
சில தலைகளை திருப்பி வைத்தான்
கடைசியில் ஒரு தந்திரன்
புதனின் கழுத்தில் கத்தியை வைத்து பிடித்துக்கொண்டான்
காலம் ஸ்தம்பித்து நின்று விட்டது
வேறு வழியற்ற காதலன்
 “வெள்ளி வேண்டும்..” , “ வெள்ளி வேண்டும் “
என்றவன் காலில் விழுந்து கதறினான்
வெற்றி தந்த களிப்பில்
அவன் அண்ணாந்து சிரிக்க,
கண் பிழைத்த அக்கணத்தில்
அவன் கால்களை பற்றியிழுத்து
ஓங்கித் தரையில் அடித்தான்
ஓடினான்.. வேகமெடுத்து ஓடினான்...
புதனில் அழுந்தக் காலூன்றி ஒரே ஒரு தாவு....
துப்பாக்கி ரவைகளுக்கும், கையெறி குண்டுகளுக்கும் தப்பி

வெள்ளியின் நிலத்தில் விழுந்து உருண்டான்.

                 நன்றி; காலச்சுவடு - ஜுலை -2016


                                  

இடமுலை வடிவக்கல்

$
0
0

                
              
        

        




    ஒரு வழியாக
கவர்மெண்ட் கக்கூஸிலிருந்து
வெளியே வந்து விட்டான்

    துரத்தியடித்த நாய்களில் ஒன்று
    திரும்ப வந்து உறுமி நிற்கிறது
    நடப்பதும் ஊர்வதும் கண்ட அதற்கு
    தவழ்வது பிடிக்கவில்லை

   இவன் பாக்கெட்டில் கைவிட்டுத் தேடினான்
   இன்னுமொரு கல் மிச்சமிருந்தது.
   அதை எடுத்து ஓங்கி எறிந்தான்
   மொழியியல் வல்லுனனும்
   தன்னம்பிக்கைப் புழுத்தியும்
   திடுக்கிட்டு எழுந்திருக்க
   உடைந்து சிதறியது

   மாற்றுத்திறனாளி எனும் சொற்கட்டு.

                  நன்றி : காலச்சுவடு - ஜுலை - 2016

நத்திங் ஸ்பெஷல் ?

$
0
0
                                                    

           

    
கைகளற்ற ஒருவன்
தன் காலால்
திருவள்ளுவரை வரைந்து காட்டிவிட்டான்.
இதில் ஒரு சுவாரஸ்யம் கிட்டிவிட்டது.
எனவே
அவனுக்கு நமது நாளிதழ்களில் ஒரு போட்டோவும் கிடைத்து விட்டது.
சுவாரஸ்யமற்ற முடவர்கள்
சுவாரஸ்யமற்ற குருடர்கள்
சுவாரஸ்யமற்ற ஊமைகள்
மூத்திரச்சந்துகளில் ஒளிந்து கொள்கிறார்கள்.
                            
                              நன்றி : காலச்சுவடு : ஜுலை: 2016 

அழகு போர் அடிக்காதிருக்கட்டும் !

$
0
0

           




ஒரு தேசத்தில் 4 அழகிகளும்
நாற்பதாயிரம் இளைஞர்களும் வாழ்ந்து வந்தனர்.
அந்த நாற்பதாயிரம் இளைஞர்களும் காதலில் துடிதுடித்தபடி இருந்தனர்.
இளைஞர்கள் எனில் அத்தனை ஆண்களும் தான்
4 : 40,0000 என்கிற ஆகக் கொடூரமான வாய்ப்பாட்டால்
அங்கு பூசல்கள் மூண்டன.
கலவரங்கள் வெடித்தன.
முதுகில் குத்த காலஅவகாசம் போதவில்லை
ஆகவே நேருக்கு நேராக நெஞ்சில் குத்திக்கொண்டனர்.
வீதிகளில் பிணங்கள் கிடந்தன
வெறிநாய்கள் மறைவிடங்களில் ஒளிந்து கொண்டன.
அரசனுக்கு துக்கம் மண்டையை அடைத்தது.
ரிஷியொருவன் தன் பத்தினியல்லாத ஒருத்தியுடன்
கலக்குங்காலையில் நம் தேசத்து அற்பனொருவன்
எட்டிப் பார்த்ததால் விளைந்த வினை..
முன்வரலாறு சொன்னார் குலகுரு.
உடனே
யாககுண்டத்தில் தீ வளர்த்து
கண்ணீர் வார்த்து
ரிஷியை வரவழைத்தனர்.
செக்கச்சிவந்த வீதிகளைக் கண்டதும்
அவருக்கு கண் கலங்கி விட்டது.
மனம் இரங்கி விட்டது.
32000 : 32000 என்று
அழகின் சமன்குலைவை நீக்கியருளினார்.
தேசத்தில் அமைதி திரும்பியது.
ஒருவரையொருவர் கட்டிக்கொண்டனர்.
விழாக்காலங்களில் வாழ்த்துக்களையும் பரிசுப்பொருட்களையும்
பரிமாறிக் கொண்டனர்.
மாரிமூன்றும் பொய்க்காது பொழிந்தன.
நீதிநெறிகள் தழைத்தோங்கின.
கலைகள் செழித்து வளர்ந்தன.
அத்தேசத்தின் கொடியிலிருந்து
“தலையில்லாத முண்டம்அகற்றப்பட்டு
முத்தமிடப்படும் கன்னம் “ பொறிக்கப்பட்டது.
 பாருங்கள்...
 இப்போது அது பட்டொளி வீசிப் பறக்கிறது !


                                                                        நன்றி : மலைகள்.காம்

பேய் - நரி - நாய் - நீ ! - கட்டுரை

$
0
0
       
              வாசிக்க   இணைப்பை திறக்கவும்...

     
                       http://kapaadapuram.com/?katturaigal_isai
                                                         

                                       

                                                     நன்றி : கபாடபுரம் .காம்

Viewing all 790 articles
Browse latest View live