Quantcast
Channel: கவிஞர் இசை
Viewing all articles
Browse latest Browse all 793

போலீஸ் வதனம்

$
0
0

                           



நான்குமுனைச் சந்திப்பொன்றில்
ஒரு போலீஷ்காரரும் ஒரு குடியானவனும்
கிட்டத்தட்ட மோதிக் கொண்டனர்.
குடியானவன் வெலவெலத்துப் போனான்
கண்டோர் திகைத்து நின்றனர்
அடுத்த கணம் அறைவிழும் சத்தத்திற்காய்
எல்லோரும் காத்திருக்க
அதிகாரி குடியானவனை நேர்நோக்கி
ஒரு சிரி சிரித்தார்.
அப்போது வானத்தில் தேவர்கள் ஒன்று கூடும் ஓசை கேட்டது.
“ நகையணி வதனத்து ஒளிநறுங்கீற்றே ! “
 என  வாழ்த்தியது வானொலி.
 போலீஸ் தன் சுடரை
 ஒரு கந்துவட்டிக்காரனிடன் பற்ற வைத்து விட்டுப்போனார்.
 அவன்
ரோட்டோரம் கிடந்து பழம் விற்கும் கிழவியிடம் கந்து வசூலிக்க வந்தவன்.
கிழவி தலையைச் சொரிந்த படியே
“ நாளைக்கு... “ என்றாள்.
 ஒரு எழுத்து கூட ஏசாமல் தன்  ஜொலிப்பை
அவளிடம் ஏற்றிவிட்டுப் போனான் அவன்.
அதில் பிரகாசித்துப் போன கிழவி
இரண்டு குட்டி ஆரஞ்சுகளை சேர்த்துப் போட்டாள்.
அது ஒரு குப்பைக்காரியின் முந்தானையில் விழுந்தது.
எப்போதாவது ஆரஞ்சு தின்னும் அவளை
ஒரு பிச்சைக்காரச் சிறுமி வழிமறிக்க
அதிலொன்றை  ஈந்து விட்டுப் போனாள்.
சிறுமியின் காலடியில்
நாய்க்குட்டியொன்று வாலாட்டி மன்றாடியது.
அதிலொரு சுளையை எடுத்து
அவள் அதன் முன்னே எறிய
சொறிநாய்க் குட்டி
அந்த "ஒளிநறுங்கீற்றை“ லபக்கென்று  விழுங்கியது.

                             நன்றி : ஆனந்தவிகடன் 

                        

Viewing all articles
Browse latest Browse all 793

Trending Articles